அவுஸ்திரேலிய அணியின் அபார பந்து
வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியையும் ஆஸியிடம்
பறிகொடுத்து 218 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
531 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி போராடிய இங்கிலாந்து அணி 4
விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 5 ஆவதும் இறுதி நாளுமான இன்று 284
ஓட்டங்களைப் பெறவேண்டிய கட்டாயத்துக்குள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்
ஆஸி. அணியின் பந்து வீச்சாலும் பலமான களத்தடுப்பாலும் அந்த இலக்கை
இங்கிலாந்து அணியினால் அடைய முடியாது போனது.
நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 6
விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்து
அணி இன்றைய ஐந்தாவதும் இறுதிநாளுமான ஆட்டத்தில் மிகுதி 4
விக்கெட்டுக்களையும் 65 ஓட்டங்களை பெறுவதற்குள் இழந்து, 218 ஓட்டங்களால்
தோல்வியடைந்தது.
அவுஸ்திரேலிய- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான வரலாற்று
சிறப்பு மிக்க குளிர்கால ஆஷஷ் தொடரின் 2 ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில்
நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 570
ஓட்டங்களுடன் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்த, இங்கிலாந்து அணி தனது
முதல் இனிங்ஸில் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதில் அபாரமாக பந்து வீசிய ஆஸி. அணியின் மிட்சல் ஜோன்சன் 7 விக்கெட்டுக்களை பதம் பார்த்தார்.
இதனையடுத்து போட்டியின் 3 ஆவது நாள் மாலை நேர தேநீர் இடைவேளையின்
பின் தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த ஆஸி. அணி 3 விக்கெட்டுக்களை இழந்து
132 ஓட்டங்களைப்பெற்ற போது ஆட்டநேரம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் போட்டியின் 4 ஆவது நாள் தனது 2 ஆவது இனிங்ஸை தொடர்ந்து
துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி 3 விக்கெட் இழப்பிற்கு 132
ஓட்டங்களுடனேயே ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இதனையடுத்து 531 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட
பதிலுக்கு தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஒரு
ஓட்டத்தைப்பெறுவதற்குள் முதலாவது விக்கெட்டைப் பறிகொடுத்து
ஆரம்பமே தடுமாறி நேற்றையநாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து
247 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் 5 ஆவதும் இறுதி நாளுமான இன்றைய ஆட்டத்தில் மிகுதி 4
விக்கெட்டுக்களையும் 65 ஓட்டங்களை பெறுவதற்குள் இழந்து, 218 ஓட்டங்களால்
தோல்வியடைந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில்
2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இப் போட்டியில் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் மிட்சல் ஜோண்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவதும் முக்கியமானதுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி பேர்த்தில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment